அன்புள்ள சகோதர்களே, தமிழில் அல்-குர்ரான் என்ற இணையத்தளத்தில் நமக்கு தேவையான சொற்களை அல்-குரானிலும் மற்றும் ஷஹிஹ் புஹாரி ஹதிஸ் தொகுப்புகளில் தேடும் வசதி உள்ளது. இதனை நமது சகோதரர்கள் அனைவரும் பயன் படுத்திகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
Thursday, February 25, 2010
Monday, February 22, 2010
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரார்த்தனைகள்
குர்ஆனிலிருந்து..
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
1. எங்கள் இறைவனே! எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக! மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக! இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக! 2:201
رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِنْ نَسِيْنَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلاَ تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِنَا رَبَّنَا وَلاَ تُحَمِّلْنَا مَا لاَ طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلاَنَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِيْنَ
2. எங்கள் இறைவனே! நாங்கள் மறந்து விட்டாலோ, அல்லது தவறிழைத்து விட்டாலோ எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவனே! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன், காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக! 2:286
رَبَّنَا لاَ تُزِغْ قُلُوْبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ
3. எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தடம்புறளச் செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) அருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளனாவாய்! 3:8
رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ
4. எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்;, எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள்வாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக! 3:16
رَبِّ هَبْ لِيْ مِنْ لَدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيْعُ الدُّعَاءِ
5. என் இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய். 3:38
رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَإِسْرَافَنَا فِيْ أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِيْنَ
6. எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக! காஃபிர்களின் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக. 3:147
رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِيْنَ
7. எங்கள் இறைவனே! நாங்கள் (இவ் வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம்;. எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று,) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக! 5:83
رَبَّنَا ظَلَمْنَا أَنْفُسَنَا وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُوْنَنَّ مِنَ الْخَاسِرِيْنَ
8. எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் – நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம் 7:23
عَلَى اللَّهِ تَوَكَّلْنَا رَبَّنَا لاَ تَجْعَلْنَا فِتْنَةً لِلْقَوْمِ الظَّالِمِيْنَ
9. நாங்கள் அல்லாஹ்வையே பூரணமாக நம்பி (அவனிடமே எங்கள் காரியங்களை ஒப்படைத்து)க் கொண்டோம், எங்கள் இறைவனே! அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே! 10:85
وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنَ الْقَوْمِ الْكَافِرِيْنَ
10. எங்கள் இறைவனே! இந்த காஃபிர்களான மக்களிடமிருந்து உன் அருளினால் எங்களை நீ காப்பாற்றுவாயாக! 10:86
رَبِّ إِنِّيْ أَعُوْذُ بِكَ أَنْ أَسْأَلَكَ مَا لَيْسَ لِيْ بِهِ عِلْمٌ وَإِلاَّ تَغْفِرْ لِيْ وَتَرْحَمْنِيْ أَكُنْ مِنَ الْخَاسِرِيْنَ
11. என் இறைவனே! எனக்கு எதை பற்றி ஞானம் இல்லையோ அதை உன்னிடத்திலே கேட்பதை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன்;, நீ என்னை மன்னித்து எனக்கு அருள் புரியவில்லையானால் நஷ்ட மடைந்தோரில் நான் ஆகிவிடுவேன். 11:47
رَبِّ اجْعَلْنِيْ مُقِيْمَ الصَّلاَةِ وَمِنْ ذُرِّيَّتِيْ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ
12. என் இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக!. 14:40
رَبَّنَا اغْفِرْ لِيْ وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِيْنَ يَوْمَ يَقُوْمُ الْحِسَابُ
13. எங்கள் இறைவனே! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக!. 14:41
رَبَّنَا آتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا
14. எங்கள் இறைவனே! நீ உன்னிடமிருந்து எமக்கு அருளை வழங்கி, எமது காரியத்தில் நேர்வழியை எமக்கு எளிதாக்கி தந்தருள்வாயாக! 18:10
رَبِّ زِدْنِيْ عِلْمًا
15. என் இறைவனே! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக! 20-114
رَبِّ لاَ تَذَرْنِيْ فَرْدًا وَأَنْتَ خَيْرُ الْوَارِثِيْنَ
16. என் இறைவனே! நீ என்னை (சந்ததியில்லாமல்) ஒற்றையாக விட்டு விடாதே! நீயே வாரிசுரிமை கொள்வோரில் மிக்க மேலானவன். 21:89
رَبِّ أَعُوْذُ بِكَ مِنْ هَمَزَاتِ الشَّيَاطِيْنِ
17. என் இறைவனே! ஷைத்தானின் தூண்டுதல்களிலிருந்து உன்னிடத்தில் நான் பாதுகாவல் தேடுகின்றேன். 23:97
رَبَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِيْنَ
18. எங்கள் இறைவனே! நாங்கள் உன் மீது ஈமான் கொண்டு விட்டோம், நீ எங்கள் குற்றங்களை மன்னித்து, எங்கள் மீது கிருபை செய்வாயாக! கிருபையாளர்களிலெல்லாம் நீயே மிகச்சிறந்தவன். 23:109
رَبِّ اغْفِرْ وَارْحَمْ وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِيْنَ
19. என் இறைவனே! நீ என்னை மன்னித்துக் கிருபை செய்வாயாக! நீ தான் கிருபையாளர்களிலெல்லாம் மிக்க மேலானவன். 23:118
رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا
20. எங்கள் இறைவனே! எங்களைவிட்டும் நரகத்தின் வேதனையைத் திருப்புவாயாக! நிச்சயமாக அதன் வேதனை நிரந்தரமானதாகும். 25:65
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ إِمَامًا
21. எங்கள் இறைவனே! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக!. 25:74
رَبِّ هَبْ لِيْ حُكْمًا وَأَلْحِقْنِيْ بِالصَّالِحِيْنَ
22. என் இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக. மேலும், ஸாலிஹானவர்களுடன் (நல்லவர்களுடன்) என்னைச் சேர்த்து வைப்பாயாக! 26:83
وَاجْعَلْ لِيْ لِسَانَ صِدْقٍ فِي الْآخِرِيْنَ
23. இன்னும், பின் வருபவர்களில் எனக்கு நீ நற்பெயரை ஏற்படுத்துவாயாக! 26:84
وَاجْعَلْنِيْ مِنْ وَرَثَةِ جَنَّةِ النَّعِيْمِ
24. இன்னும், பாக்கியம் நிறைந்த சுவனபதியின் வாரிசுக்காரர்களில் (ஒருவனாக) என்னை ஆக்கி வைப்பாயாக! 26:85
وَلاَ تُخْزِنِيْ يَوْمَ يُبْعَثُوْنَ
25. இன்னும் (மனிதர்கள் உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாளில் என்னை நீ இழிவு படுத்தாதிருப்பாயாக! 26:87
رَبِّ أَوْزِعْنِيْ أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِيْ أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَدْخِلْنِيْ بِرَحْمَتِكَ فِيْ عِبَادِكَ الصَّالِحِيْنَ
26. என் இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக! இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக! 27:19
رَبِّ إِنِّيْ ظَلَمْتُ نَفْسِيْ فَاغْفِرْ لِيْ
27. என் இறைவனே! நிச்சயமாக நான் என் ஆத்மாவுக்கே அநியாயம் செய்து விட்டேன்;, ஆகவே, நீ என்னை மன்னிப்பாயாக! 28:16
رَبِّ هَبْ لِيْ مِنَ الصَّالِحِيْنَ
28. என் இறைவனே! நல்லவர்களிலிருந்து நீ எனக்கு (குழந்தையை) தந்தருள்வாயாக. 37:100
رَبِّ أَوْزِعْنِيْ أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِيْ أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَصْلِحْ لِيْ فِيْ ذُرِّيَّتِيْ إِنِّي تُبْتُ إِلَيْكَ وَإِنِّيْ مِنَ الْمُسْلِمِيْنَ
29. என் இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த நிஃமத்துக்காக, (அருட் கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய ஸாலிஹான நல் அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! எனக்கு என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக! நிச்சயமாக நான் தவ்பா செய்து (உன்பக்கம் திரும்பி) விட்டேன். இன்னும் நிச்சயமாக நான் முஸ்லிம்களில் ஒருவனாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக) இருக்கின்றேன். 46:15
رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِيْنَ سَبَقُوْنَا بِالْإِيْمَانِ وَلاَ تَجْعَلْ فِيْ قُلُوْبِنَا غِلاًّ لِلَّذِيْنَ آمَنُوْا رَبَّنَا إِنَّكَ رَءُوْفٌ رَحِيْمٌ
30. எங்கள் இறைவனே! எங்களையும், விசுவாசம் கொள்வதில் எங்களை முந்திவிட்ட எங்களுடைய சகோதரர்களையும் மன்னித்தருள்வாயாக! ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் வெறுப்பை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; மிக்க கருணையுடையவன். 59:10
رَبَّنَا لاَ تَجْعَلْنَا فِتْنَةً لِلَّذِيْنَ كَفَرُوْا وَاغْفِرْ لَنَا رَبَّنَا إِنَّكَ أَنْتَ الْعَزِيْزُ الْحَكِيْمُ
31. எங்கள் இறைவனே! காஃபிர்களுக்கு, எங்களைச் சோதனை(ப் பொருள்) ஆக ஆக்கிவிடாதே! எங்கள் இறைவனே! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன். 60:5
رَبَّنَا أَتْمِمْ لَنَا نُوْرَنَا وَاغْفِرْ لَنَا إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ
32. எங்கள் இறைவனே! எங்களுக்கு, எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன். 66:8
رَبِّ اغْفِرْ لِيْ وَلِوَالِدَيَّ وَلِمَنْ دَخَلَ بَيْتِيَ مُؤْمِنًا وَلِلْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنَاتِ وَلاَ تَزِدِ الظَّالِمِيْنَ إِلاَّ تَبَارًا
33. என் இறைவனே! எனக்கும், என் பெற்றோருக்கும், என் வீட்டில் நம்பிக்கையாளர்களாகப் பிரவேசித்தவர்களுக்கும், முஃமினான ஆண்களுக்கும், முஃமினான பெண்களுக்கும், நீ மன்னிப்பளிப்பாயாக! மேலும், இந்த அநியாயக்காரர்களுக்கு அழிவையேயல்லாது (வேறு எதையும்) நீ அதிகரிக்காதே. 71:28
Wednesday, February 10, 2010
அல்லாஹ் என்பது அல்-இலாஹ் என்பதாகும்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அரபு மொழி எழுத்துகளில் அல்லாஹ்அல்லா அல்லது அல்லாஹ் என்பது அல்-இலாஹ் என்பதாகும். அதாவது வணக்கத்திற்குத் தகுதியான ஒரே இறைவன் என்பது அதன் பொருள். கடவுள், குதா, காட் என்ற பதங்கள் வணங்கப்படுபவை என்ற பொருளில் அவ்வாறு கூறப்படுகின்றன. அதற்குச் சமமான பொருளை உடையதே அரபு மொழியில் உள்ள இலாஹ் என்ற பதம். வணங்கப்படுகின்ற எதனையும் இலாஹ் என்று கூறலாம். இலாஹ் என்ற பொதுப் பெயருடன் அல் என்ற குறிப்புப் பெயரும் சேர்ந்ததே அல்லாஹ் என்பதாகும் என்பது மொழியியல் வல்லுனர்களின் கூற்று. அல்லாஹ் என்னும் சொல் எந்த ஒரு பாலையும் குறிக்காது ( ஆண்,பெண்,பலவின் ).இந்நிலையிலேயே திருக்குர்ஆன் என்ற இசுலாமியர்களின் மறை அல்லாஹ் என்ற வார்த்தையை அறிமுகப்படுத்துகின்றது.
'அல்லாஹ்' என்பது ஒரு மொழியின் வார்த்தையாகும். அதுவும் அசல் உச்சரிப்பிலிருந்து மருவி அரபு மக்களிடம் ஏற்றதாழ 4000 வருடங்களாக புழக்கத்தில் உள்ள ஒரு வார்த்தையாகும். அந்த அரபு மக்களின் பெரும்பான்மையானோர் தாங்கள் வணங்கி வந்த மண், மரம், மட்டை, கற்கள், இன்னப்பிற மரணித்த மனிதர்கள், நம்பி இருந்த தேவதைகள் இவைகள் அனைத்தையும் 'இலாஹ்' என்று குறிப்பிட்டு வந்தனர். இலாஹ் என்பது பிரிதொரு சொல்லாகும். இதற்கு 'வணங்கப்படும் கடவுள்' என்பது பொருள். பல வணங்கப்படுபவைகளை உருவாக்கிக் கொண்ட அவர்கள், இவை அனைத்தையும் கடந்து ஒரு பெரிய சக்தி இருக்கின்றது என்றும் அதற்கு அல்லாஹ் என்ற பெயரையும் சூட்டி வந்தார்கள். இவை அனைத்தையும் அந்த மக்களிடம் இஸ்லாம் வெளிப்படுவதற்கு முன்பிருந்த வரலாறாகும். இந்த அல்லாஹ் என்ற பெரிய கடவுள் கொள்கை சித்தாந்தம் அரபு மக்களிடம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலைபெற்ற ஒன்றாகும்.
பெரியக் கடவுள் (அல்லாஹ்), குட்டிக் கடவுள்கள்(இலாஹ்) என்ற பலவீன சித்தாந்தத்தை இஸ்லாம் முறைப்படுத்தி பல்வேறு குட்டிக் கடவுள்களையெல்லாம் களைந்து விட்டு அந்த மாபெரும் சக்தியான ஒரே இறைவனை (அரபு மொழிக் குறியீடான அல்லாஹ்வை) நிலைப்பெற செய்தது. "பலக் கடவுள்கள் வேண்டாமென்று (இவர்) ஒரேக் கடவுளாக ஆக்கிவிட்டாரா. இது ஆச்சரியமான ஒன்றுதான் என்று (அந்த அரபு மக்கள்) கூறினர்". (அல் குர்ஆன் 38:5)
Thursday, February 4, 2010
டென்ஷன் ஆவது ஏன்?
ஒவ்வொரு மனிதனும் தான் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை பலவிதமான இன்பங்களையும், துன்பங்களையும் சந்திக்கின்றான். இது மாறி மாறி வருவதுதான் வாழ்க்கை. இதுபற்றி அல்லாஹ் அல்குர்ஆனில் குறிப்பிடுகையில், நிச்சயமாக கஷ்டத்துடனேதான் இலகு உள்ளது. (அல்குர்ஆன் 94:6)
மேலும் ஓரிடத்தில், நிச்சயமாக நாம் ஓரளவு பயத்தாலும், பசியாலும், செல்வங்கள், உயிர்கள் மற்றும் விளைச்சல்கள் ஆகியவற்றில் ஏற்படும் இழப்புகளாலும் உங்களைச் சோதிப்போம் பொறுமையாளர்களுக்கு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக! (2:155)
அல்லாஹ் ஒருவருக்கு நன்மையை நாடினால் அவரை அவன் சோதிக்கிறான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் (ஆதாரம் புஹாரி, முஸ்லிம்)
இவ்வாறு அல்குர்ஆனிலும், ஹதீதுகளிலும் ஏராளமாகச் சொல்லப்பட்டு விட்டது. இவைகளையெல்லாம் அதிகமானோர் பார்ப்பதுமில்லை, சிந்திப்பதுமில்லை. மாறாக எதற்கெடுத்தாலும் வீணான தடுமாற்றம், நிலைகுலைதல், உணர்ச்சிவசப்படுதல் போன்றவற்றால் ‘டென்ஷன்’ எனும் நோய்க்குள்ளாகியே தனது வாழ்வில் பாதியை நரகமாக ஆக்கிக் கொள்கிறார்கள். பூமியிலோ உங்களிலோ எந்தவோர் துன்பம் நேர்ந்தாலும் அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னர் பதிவேட்டில் இல்லாமலில்லை. நிச்சயமாக இது அல்லாஹ்விற்கு மிக எளிதானதாகும் (அல்குர்ஆன் 57:22)
ஆக ஒரு மனிதன் டென்ஷன் ஆகுவதற்கு முக்கிய காரணம் அவனிடம் உறுதியான ஈமானில்லாததுதான். இதில் அவன் உறுதியாக இருந்தால் எக்கவலையும் படத்தேவையில்லை. அதாவது அவனுடைய உள்ளத்தில் லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற அடிப்படையான கலிமா ஆழமாக அஸ்திவாரமிடப்பட்டிருக்க வேண்டும். எனவே முதலில் நீங்கள் உங்களை ஒரு நல்ல முஃமினாக மாற்றிக் கொள்ள வேண்டும். வெளித்தோற்றத்தால் மாத்திரமன்றி உள்தோற்றத்தாலும் (உள்ளம்) பரிசுத்தமாகி உறுதியான ஈமானை நிறைபெறச் செய்வதன் மூலம் ஒவ்வொரு செயலையும் செய்யும் முன் எம்மைப் படைத்த ரப்புல் ஆலமீனிடமே முதல் விண்ணப்பத்தைப் போட வேண்டும்.
எந்த நற்காரியமாக இருந்தாலும் அவன் பெயரில் ஆரம்பம் செய்யும்போது எங்களுக்கு எவ்வித சிக்கல்களும் வரப் போவதில்லை. அப்படி ஏதாவது தடங்கல்கள் வந்தாலும் அதிலும் ஏதாவது நன்மை இருக்கும் இது எம்மைப்படைத்தவன் எமது ஈமானைச் சோதிப்பதற்காக வைக்கும் பரிட்சையாகவே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதிலும் கூட டென்ஷன் ஆகாமல் ஆக வேண்டிய காரியங்களைச் செய்யும் போது சுலபமாக எல்லாமே நிறைவேறிவிடும். இதுப் பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறியதாவது, இறை நம்பிக்கையாளனின் நிலை வியப்புக்குரியது! அவன் எந்த நிலையில் இருந்தாலும் அதனால் நன்மைகளையே குவிக்கின்றான் இந்த நற்பேறு வேறு எவருக்கும் கிடைப்பதில்லை. (இறை நம்பிக்கையாளனைத் தவிர) அவன் வறுமை, நோய், துன்பம் ஆகிய நிலைகளில் இருந்தால் பொறுமையைக் கைக்கொள்கிறான். செல்வம், செழிப்பான நிலையில் இருக்கும் போது நன்றி செலுத்துகிறான். இந்த இரண்டு நிலைகளுமே அவனுக்கு நன்மைக்கான காரணங்களாய் அமைகின்றது. இந்த விஷயத்தில் தான் எம்மக்கள் பெரும் தவறு செய்கின்றார்கள். எப்படியான முஃமினாக இருந்தாலும் இது விஷயத்தில் கோட்டை விட்டு விடுகின்றனர். இன்பத்தில் நன்றி செலுத்துவதுமில்லை, துன்பத்தில் பொறுமையைக் கைக் கொள்வதுமில்லை. அதற்கும் பாளாய் போன இந்த டென்ஷன்தான் காரணம்.
டென்ஷன் அடிப்படை மையமே இந்த உள்ளம் தான். இது கெட்டு விட்டால் எமது உடலே கெட்டுவிடும். இதனால் இரத்த அழுத்தம், புற்று நோய், சக்கரை வியாதி போன்ற பயங்கரமான வியாதிகளையெல்லாம் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும் எனவே இதிலிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்வதில் ‘திக்ர்’ பெரும் பங்கு வகிக்கிறது. எனவே நேரங்களை ஒதுக்கி நாம் திக்ர் செய்யப் பழகிக் கொள்ள வேண்டும். இதனால் நம் உடலில் சகல பாக்கியங்களையும் பெறுவதுடன் உள்ளமும் அமைதி பெறும். காலையிலும் மாலையிலும் உம்முடைய இறைவனின் திருநாமத்தை தஸ்பீஹ் (துதி) செய்து கொண்டிருப்பீராக என்று அல்லாஹ் அல்குர்ஆனில் பல இடங்களில் குறிப்பிடுகின்றான். இப்படி எங்கள் வாழ்க்கையில் எந்த நேரமும் திக்ர் செய்யக் கூடியவர்களாக நாம் மாறிவிட்டால் டென்ஷன் என்ற வார்த்தைக்கே இடமிருக்காது.
ஒரு வகையான ஷைத்தானின் ஊசலாட்டம் தான் இந்த டென்ஷன் இதற்கு இஸ்லாம் நல்ல வழிமுறைகளைச் சொல்லித் தந்திருக்கிறது. காலையில் விழித்ததிலிருந்து தூங்கும் வரைக்கும் செய்யும் அனைத்து காரியங்களையும் தூய்மையான எண்ணத்துடன் இறைவனுக்காகச் செய்யும் பொழுது அது நன்மையை பெற்றுத்தரும் காரியமாக மாறுகிறது. எனவே காலை, மாலை துவாக்கள், சாப்பிடும்போது, கழிவறைக்குச் செல்லும்போது, வீட்டைவிட்டு வெளியேறும்போது, தூங்கும்போது போன்ற அனைத்து செயல்களிலும் ஓத வேண்டிய துவாக்களை ஓத வேண்டும். இப்படி செய்யும் பொழுது ஒவ்வொரு விநாடியும் எம்மிறைவனை நாம் நினைத்துக் கொண்டேயிருக்கிறோம். அத்துடன் நம்மை அவன் எந்த நிலையிலும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற இஹ்ஸான் நிலை எம்மில் ஏற்படுகிறது. இந்திலையில் எவ்விதமான கெட்ட செயல்கள் செய்வதற்கும் நாம் முன்வரமாட்டோம். இதனால் தேவையில்லாத டென்ஷனைவிட்டும் நம்மை நாம் காத்துக் கொள்கிறோம்.
டென்ஷனாவதற்கு அடுத்த முக்கிய காரணம் பேராசையாகும். எம் வாழ்வில் சகல நிலைகளிலும் எமக்கு மேல்மட்டத்திலுள்ளவர்களின் நிலையோடு நம்மை ஒப்பிட்டுப் பார்க்கிறோம். இதனால் நம்மை அறியாமலே நாம் அவர்களைப் போலாக வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். இதனால் ஆகப்போவது ஒன்றுமில்லை. பொறாமையுடனும், கர்வத்துடனுமான வீணான டென்ஷன்தான் வரும். மனிதனுக்கு ஒரு ஓடை நிரம்ப தங்கம் இருந்தாலும் தனக்கு (அது போல்) இரண்டு ஓடைகள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறான். அவனது வாயை மண்தான் நிரப்பும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள் (ஆதாரம் புகாரி, முஸ்லிம்)
அல்லாஹ் அல்குர்ஆனில் பேராசைபற்றி இப்படிக் குறிப்பிடுகிறான். உங்களில் சிலரை மற்றும் சிலரைவிட அல்லாஹ் சிறப்பித்திருப்பதில் நீங்கள் பேராசை கொள்ளாதீர்கள் (அல்குர்ஆன் 4:32)
மேலும் நீங்கள் மண்ணறைகளைச் சந்திக்கும் வரை, அதிகமாகத் தேடும் ஆசை உங்களைப் பராக்காக்கிவிட்டது (அல்குர்ஆன் 102:1)
எனவே இவ்வுலக வாழ்க்கை வெறும் சோதனைக்களம்தான் இதில் கூடுதலாக பேராசைப்படாமல் இறைவன் எமக்குத் தந்ததை போதுமாக்கிக் கொண்டு வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.
குடும்பப் பெண்கள் கூடுதலாக இந்த டென்ஷனுக்கு ஆளாகிறார்கள். தங்களது வீட்டு வேலைகளை உரிய நேரத்தில் முடிக்காமல் பிறகு செய்வோம் என்று தள்ளிப் போட்டுவிட்டு தேவையில்லாத சினிமாக்களைப் பார்ப்பதில் நேரத்தை வீணடிக்கிறார்கள். அது மட்டுமல்ல அதில் வருகிற அர்த்தமற்ற அழுகைக்குப் பின்னால் தாமும் உணர்ச்சி வசப்பட்டு அழுது பாவத்தைத் தேடிக் கொள்கிறார்கள். இந்தக் கண்களால் அல்லாஹ்விற்குப் பிடித்தமாதிரி நல்லதைப் பார்த்து நாம் செய்த பாவங்களுக்கு இறைவனிடத்தில் அழுது புலம்பி மன்னிப்புக் கேட்டிருக்கின்றோமா என்றால் இல்லவே இல்லை. இது ஒரு தேவையில்லாத டென்ஷன்தானே.
எனவே உரிய உரிய வேலைகளை உரிய நேரத்தில் செய்து முடிக்கும்போது எங்களுக்கு எந்த விதமான டென்ஷனும் வரப் போவதில்லை. அத்துடன் நமக்குக் கூடுதலான நேரமும் மிச்சப்படும். நமக்குக் கிடைக்கும் உடல் ஆரோக்கியமும், ஓய்வான நேரமும்தான் நமக்கு அல்லாஹ் வழங்கிய உண்மையான அருள் என்ற நபிமொழியை மனதில் எடுத்து எமக்குக் கிடைக்கும் ஓய்வு நேரங்களையும் நல்ல விஷயங்களை சிந்தித்து செயல்பட பழகிக் கொள்வோமேயானால் டென்ஷன் தானாக ஓடிவிடும்.
நான்கு பேருக்கு விருந்து கொடுப்பதாக இருந்தாலும்கூட எம்பெண்களுக்கு டென்ஷன் ஏற்பட்டுவிடும். இது போக விருந்திற்கு வருபவர்கள் சமைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் வந்துவிட்டாலோ அவர்கள் படும்பாட்டை பார்க்கத் தேவையில்லை. எனவே நாம் அப்படிப் போவதாக இருந்தால் ஒரு போன் செய்து அவர்களுக்கு முன் அறிவிப்பு செய்துவிட்டுச் செல்ல வேண்டும்.
ரமளான் மாதம் வந்துவிட்டாலே போதும் ஒரு சிலரைத்தவிர ஏனையோர் கூடுதலாக டென்ஷாவது வழக்கம் நோன்பு திறப்பதற்கு என்னென்ன வகையான உணவுப் பண்டங்களையெல்லாம் சமைக்க முடியுமோ அதையெல்லாம் சமைத்துக் கொண்டிருப்பது. அந்தந்த நேரத் தொழுகைகளைக்கூட உரிய நேரத்தில் நிறைவேற்றுவதில்லை. கடைசி நேரத்தில் டென்ஷனாகிக் கொண்டு லுஹர், அஸர் எல்லாம் சேர்த்து ஒன்றாகவே தொழுவார்கள். கடைசியில் நோன்பு திறப்பதில் கூட அக்கரை செலுத்துவதில்லை. அதான் சொன்ன பிறகுதான் அய்யோ நோன்பு திறக்க வேண்டுமே என்று பதறியடித்துக் கொண்டு நோன்பைத் திறப்பார்கள்.
அத்துடன் பெருநாளைக்குத் தேவையான துணிமனிகளை எடுப்பதில் கூட டென்ஷனாகித் திரிவார்கள். எந்தவகை டிசைனைத் தேர்வு செய்வது என்று தெரியாமல் கடைகடையாக ஏறி இறங்கி கடைசியில் வரும் அந்தப் புனிதமான லைலத்துல்கத்ரின் இரவைக்கூட அவர்களால் அடைய முடியாமல் போய்விடுகிறது. எனவே இப்படிபட்ட நிலைமைகளிலிருந்து நாங்கள் விடுபட வேண்டும் இந்தப் புனிதமான மாதத்தை வீணாக்காமல் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நேரம் தவறாமல் தொழுகையை நிறைவேற்றுவது, சுன்னத்தான தொழுகைகளையும் சேர்த்துக் தொழுவது, அல்குர்ஆன் ஓதுவது, திக்ரு செய்வது போன்ற செயல்களில் ஈடுபடவேண்டும் அத்துடன் பெருநாளைக்குத் தேவையான துணிமனிகளை ரமளான் மாதத்திற்கு முதல் வாரமே எடுத்து வைத்துவிட வேண்டும். இப்படி செய்தோமேயானால் நமது உள்ளமும் உடலும் தூய்மையடைவதுடன் புத்துணர்ச்சியும் ஏற்படுகிறது. எந்தவகையான டென்ஷனுக்கும் ஆளாக மாட்டோம்.
மாணவர்களுக்குப் பரீட்சை வந்தாலே முதலில் டென்ஷனாவது பெற்றோர்கள்தான். இது முற்றிலும் தவறானதாகும் எப்பொழுதாவது ஒரு நாள் அந்த வருடத்திற்கான பரீட்சை வரும் என்று எமக்குத் தெரியும்தானே எனவே அதற்குத் தகுந்த மாதிரி எம்மை ஆயத்தம் செய்து கொள்ள வேண்டும். எல்லாப் படிப்பையும் ஒரே நேரத்தில் படிக்க இருக்காமல், அந்தந்த நாட்களுக்குரிய படிப்பை உடனுக்குடன் படித்து அதில் முக்கியமான விஷயங்களை சிறு குறிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். இப்படிச் செய்யும் போது நாங்கள் கடைசி நேரத்தில் டென்ஷனாக வேண்டிய தேவையே ஏற்படாது. அத்துடன் மாணவர்கள் தேவையில்லாத இன்டர்நெட் தொடர்பு, டெலிபோன் தொடர்புகளை எல்லாம் முடிந்தவரை குறைத்துக் கொள்ள வேண்டும். இது விஷயத்தில் பெற்றோர்களும் கூடுதலான கவனமெடுக்கத் தவறக்கூடாது.
டென்ஷனாவதற்கு அடுத்த முக்கியமான காரணம் எமக்கு ஏற்படும் மிருகத்தனமான கோபமாகும். இது ஷைத்தானின் குணங்களில் ஒன்றாகும் கோபம் வரும் போது நம்மை அறியாமல் செய்வதையெல்லாம் செய்துவிட்டு பின்புதான் இப்படிச் செய்துவிட்டோமே என்று யோசிப்பது. கோபம் வரும்போது தன்னை அடக்கி ஆள்பவன்தான் வீரனாவான் ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் கோபம் கொள்ளாதீர்கள் என்று கூறினார்கள் (ஆதாரம் – புஹாரி, முஸ்லிம்) எனவே கோபம் வரும் போது டென்ஷனாகாமல் அஊதுபில்லாஹி மினஸ்ஷைத்தான்னிர்றஜீம் என்று சொல்லிக் கொண்டால் கோபம் அப்படியே தனிந்துவிடும்.
பணிப்பெண்கள் என்ற போர்வையில் வெளிநாடு வரும் பெண்கள் படும்பாட்டைக் கொஞ்சம் உற்று நோக்குவோமானால் அதுவும் கூட பருவக்கோளாறினால் ஏற்படுகின்ற டென்ஷன் என்றால் அது மிகையாகாது. இதனால் இவர்கள் வேலை செய்யவரும் வீட்டை விட்டு வெளியேறி இங்கு நம்மை கேட்க ஆளில்லைதானே என்று நினைத்துக் கொண்டு தம்பாட்டிற்கு வருபவர் போபவரோடெல்லாம் உறவு பிடித்து தனது கற்பையே பறிகொடுத்துவிட்டு நிற்கெதியாக நிற்கின்றனர். பிறகுதான் இப்படி ஆகிவிட்டதே என்று வருத்தப்பட்டு வாழ்வதா சாவதா என்ற முடிவிற்கு ஆழாகின்றனர். எனவே இந்த விபச்சாரத்தில் வீழ்ந்து சீரழிந்து போவதைத் தடுப்பதற்குத்தான் இஸ்லாமிய மார்க்கம் பருவ வயதோடு திருமணம் செய்யும்படி பணிக்கிறது. இந்த வகையில் சீதனப்பிரச்சினையும் பெற்றோருக்கு பெரும் டென்ஷனை ஏற்படுத்துகிறது. இதனால்தானே அவர்கள் தம்பிள்ளைகளை வெளிநாட்டிற்கு உழைக்க அனுப்புகிறார்கள். இந்தப் பாவம் சீதனக் கொடுமைக்காரரை சும்மாவிடாது.
நம்மில் பெரும்பாலானவர்கள் கணவரை, பிள்ளைகளை அவரவர் வேலைகளுக்கு வாகனங்களில் அனுப்பிவிட்டு வீட்டில் உட்கார்ந்து கொண்டு தேவையில்லாமல் டென்ஷனாவது. எங்கே போய் சேர்ந்திருப்பார்களோ அல்லது இடையில் ஏதாவது ஆகியிருக்குமோ என்றெல்லாம் தடுமாறுகிறார்கள் எனவே நாம் அவர்களை அனுப்பும் போது படைத்தவனை நினைத்து அவனுடைய துணையுடன் போய்வரும்படி வழியனுப்ப வேண்டும்.
(மனிதனாகிய) அவனுக்கு முன்னும் பின்னும் தொடர்ந்து வரக்கூடிய வானவர்கள் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைப்படி அவனைப் பாதுகாக்கின்றனர் (அல்குர்ஆன் 13:11).
இந்த திருமறை வசனத்தின் மூலம் தெளிவாகக் கூடியதாக இருக்கிறது. எனவே எம் அனைவரையும் அல்லாஹ் நிச்சயமாக பாதுகாக்கக்கூடியவன் என்ற உறுதியான நம்பிக்கை எம்மில் ஏற்பட வேண்டும்.
ஆக மொத்தத்தில் மனோபாவம்தான் எல்லாவகையான டென்ஷனுக்கும் காரணமாக அமையும். இந்தக் குட்டிக்கதை எமக்கு நல்ல பாடமாக அமைகிறது. ஒரு பாலைவனத்தில் இருவர் ஒட்டகத்தில் போய்க் கொண்டிருந்தனர். சற்றுக் களைப்பு வரவும் இருவரும் ஓர் ஓரமாக சாய்ந்து ஓய்வெடுத்துக் கொண்டனர். திடீரென்று ஒட்டக ஓட்டியை மற்றவர் படாதபாடு படுத்துகிறார். அவரை உருட்டி, பிரட்டி, காலை இழுத்து, தலையை அசைத்து, இப்படிச் செய்யும் போது ஓட்டக ஓட்டிக்குக் கோபம் வந்தது. ஏன் என்னை நீ இந்தப்பாடு படுத்துகிறாய் என்று கேட்டால் நீ கொஞ்சம் சும்மா இரு என்று சொல்லிவிட்டு இவர் வேலையையே பார்த்தார். நீ சற்று நேரம் வாயைத் திறந்து கொண்டே தூங்கிவிட்டாய் உன் வாயில் குட்டிப்பாம்பு சென்றுவிட்டது அதை எடுத்துவிடவே இந்தப்பாடு படுத்தினேன் என்று பாம்பு வாயிலிருந்து வந்தபின் சொன்னார் ஏன் இதை முன்னமே சொல்லக்கூடாதா என்று அவர் கேட்டார் அதற்கு மற்றவர் முன்னமே சொல்லியிருந்தால் நீ டென்ஷனால் செத்தே போயிருப்பாய் என்று கூறினார்.
இது போலத்தான் வைத்தியர்களிலும் சிலர் இருக்கின்றனர். ஒரு நோயாளியைப் பார்த்ததும் உடனே சத்திர சிகிச்சை செய்ய வேண்டும் அப்படி, இப்படி என்று அவரை டென்ஷனாக்கி விடுகின்றனர். இந்நிலையில் அவரது நோய் இருந்ததைவிடவும் அதிகரிக்கிறது. எனவே முதலில் வைத்தியர்கள் நோயாளிகள் இப்படியான நிலையில் இருந்தாலும் அவர்களை டென்ஷனாக்காமல் ஆறுதலாகவும் அன்பாகவும் எடுத்துச் சொல்லும் போது பாதி நோய் போய்விடும். எனவே இவர்களுடைய பராமரிப்பிலேதான் நோயாளார்கள் கூடுதலாக டென்ஷன் இல்லாமல் மன உறுதியுடன் போராடி குணமடைகின்றனர்.
உன் மனம் உன்னை என்ன நினைக்கிறது என்று நீ உன்னைப்பார் பிறர் என்னை என்ன நினைக்கிறார் என்று நினைக்காதே. நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் உனக்கு துன்பம் ஏதும் வந்தால் நான் இப்படிச் செய்திருந்தால் இப்படி ஆகியிருக்கும் என்றெண்ணாதே மாறாக, அல்லாஹ் இதனை விதித்துள்ளான், அவன் விரும்பியதைச் செய்தான் என்று கருது. ஏனெனில் இப்படிச் செய்திருந்தால், அப்படிச் செய்திருந்தால் என்றெண்ணுவது ஷைத்தானின் செயற்பாட்டிற்கு வழிதிறந்து விடும் எனவே எது நடந்தாலும் இறைவனின் நாட்டப்படியே நடைபெறும் என்ற உறுதியான நம்பிக்கையை எம்மில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். உண்மை முஃமின் எந்த நேரமும் ஒரே நிலையில் இருப்பான் துக்கமோ சந்தோஷமோ இறைவன் பக்கம் விட்டுவிட்டு தைரியமாகவும் மனம் சஞ்சலப்படாமலும் மறுமையை நோக்கியதாகவே அவனுடைய பயணம் இருக்கும்.
ஆனால் வரவிருக்கும் இந்த மறுமையைப் பற்றி பெரும்பாலானவர்கள் சிந்திப்பதுமில்லை டென்ஷனாவதுமில்லை அந்த மஹ்ஷரில்தான் இப்படிப்பட்டவர்கள் போய் நின்று கொண்டு டென்ஷனாவார்கள் போலும் அங்கே போய் நின்று டென்ஷனாகி என்ன பயன் ஒன்றுமே ஆகப்போவதில்லை. நீயே ஒரு டென்ஷன் என்று அவன் நரகிலே வீசப்படுவான். எனவே உண்மை உள்ளம் கொண்ட மனிதர்களாக டென்ஷன் என்ற வார்த்தைக்கே இடம் வைக்காமல் எம் வாழ்க்கையை அல்குர்ஆன், ஹதீது பிரகாரம் அமைத்துக் கொண்டு சுபீட்சமாக, சுகமாக வாழ்ந்து இறையடி சேர எங்கள் அனைவருக்கும் அந்த வல்லோன் துணை புரியட்டும்.
- ஸஃபியா N.ஜமான்,
அர்ருவைஸ், ஜித்தா, சவூதி அரேபியா
நன்றி: சுவனம்.காம்
Friday, January 29, 2010
சிந்தனைக்கு சில...!
பேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள், செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்
சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்
யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.
நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.
நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!
வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.
சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.
முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.
ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்
எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை
இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்
யார் சொல்வது சரி என்பதல், எது சரி என்பதே முக்கியம்
ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்
பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதற் எறிவோம்
நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்
உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்
உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்
வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.
தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்
உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்
செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்
அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்
வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்
தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.
பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்
ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்
சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.
ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது
Saturday, January 23, 2010
ஜமாத்-ஏ-இஸ்லாமி ஹிந்த் மாநாடு
திருச்சியில் ஜனவரி 30, 31ந் தேதிகளில் ஜமாத்-ஏ-இஸ்லாமியின் தமிழ் மாநில மாநாடு நடைபெறுகிறது. இந்த இரண்டு நாள் மாநாட்டை அனைத்து இந்திய தலைவர ஜலாலுத்தீன் உமரி தொடங்கி வைக்கப்போவதாக செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. இதனையொட்டி ஒரு பெரும் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 30,000 பேர் இதில் பங்கெடுத்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Thursday, January 21, 2010
பாதுகாக்கப்படும ஃபிர்அவ்னின் உடல்! சிந்திக்கும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி!
1898 ல் எகிப்தில் கண்டெடுக்கப்பட்ட அதிசய மம்மி 3000 ஆண்டு பழமை மிக்க அன்றைய எகிப்தை ஆண்டு வந்த இரண்டாம் ரம்சீஸ் என்ற ஃபிர்அவ்னின் உடல் என்று அடையாளம் காணப்பட்டது. தொல் பொருள் ஆராய்ச்சிக்கு தனி முக்கியத்துவம் அளித்து வந்த ஃப்ரான்சு நாடு அந்த உடலை ஆராய்ச்சி செய்வதற்காக எகிப்திடம் கேட்டு வாங்கியது. மருத்துவ அறிவியல் துறை ஆய்வாளரான டாக்டர் மோரிஸ் புகை தலைமையிலான குழு அவ்வுடலை ஆய்வுக்கு உட்படுத்தியது. உடலில் படிந்திருந்த உப்பின் துணிக்கைகளை வைத்து இது கடலில் மூழ்கி இறந்தது என்ற முடிவுக்கு வந்தனர். ஆய்வின் முடிவில் அவ்வுடல் மூவாயிரம் ஆண்டு பழமையான எகிப்தை ஆண்ட மன்னனின் உடல் என்று கண்டறியப்பட்டது! அந்நேரம் பாதுகாக்கப்படுவதாக இறைவன் வாக்களித்திருக்கும் ஃபிர்அவ்னின் உடல் பற்றிய பேச்சு சிந்தனையாளர்கள் மத்தியில் எழ ஆரம்பித்தது. இது பற்றிய செய்தி மோரிஸ் புகையின் கவனத்துக்கும் வந்தது. 1898 ல் கண்டெடுக்கப்பட்ட மம்மியைக் குறித்து 1400 வருடங்களுக்கு முன்பே கூறப்பட்டதா? இது எப்படி சாத்தியமாகும்? என்று சிந்தனை செய்தார் மோரிஸ் புகை.
சிந்தனையில் மோரிஸ் புகை!
திருக்குர்ஆன் கடலில் மூழ்கி இறந்த பின்னர் ஃபிர்அவ்னின் உடல் பாதுகாக்கப்படும் என்று பிரகடனம் செய்கிறது. தோரா மற்றும் பைபிளின் பழய ஏற்பாடும் மோசேயின் காலத்தில் இஸ்ரவேலர்களைக் கொடுமைப் படுத்திய பர்வோன் மன்னனைப் பற்றியும் இறுதியில் அவன் கடலில் மூழ்கி இறந்தான் என்றும் கூறுகிறது. இதோ என் முன்னாலிருப்பது அக்காலத்தில் இறந்து விட்ட உடல் அல்லவா? என் ஆராய்ச்சியின் மூலம் நான் அறிந்திருக்கும் முடிவை 1400 ஆண்டுகளுக்கு முன் முஹம்மது (ஸல்) எவ்வாறு அறிந்து கொண்டார்கள்? பைபிளில் தேடினார் மோரிஸ் புகை. பர்வோன் மன்னனின் முடிவைப் பற்றி யாத்திராகமம் இவ்வாறு கூறுகிறது.
ஜலம் திரும்பிவந்து, இரதங்களையும் குதிரைவீரரையும் அவர்கள் பின்னாக சமுத்திரத்தில் பிரவேசித்திருந்த பார்வோனுடைய இராணுவம் அனைத்தையும் மூடிக்கொண்டது; அவர்களில் ஒருவனாகிலும் தப்பவில்லை. (யாத்திராகமம் 14 :28)
இவ்வுடல் பாதுகாக்கப்படும் என்பதற்கான எந்தக் குறிப்பையும் பைபிள் வழங்கவில்லை.
ஆய்வுக்குப் பின்னர் பர்வோன் மன்னனின் உடல் விலை உயர்ந்த கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டு தனி மரியாதையுடன் எகிப்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் மோரிஸ் புகை சிந்தனையில் ஆழந்தார்! இவ்வுடல் பாதுகாக்கப்படும் என்ற குர்ஆனின் செய்தி அவரை சிந்திக்கத் தூண்டியது. இதே வேளையில் தான் சவூதி அரேபியாவில் மருத்துவ அறிவியல் சம்மந்தமான ஒரு மாநாடு நடை பெற்றது. மோரிஸ் புகை அதில் கலந்து கொண்ட போது தான் கண்டு பிடித்த உண்மையையும் தண்ணீரில் மூழ்கி இறந்த பின்னர் பாதுகாக்கப்பட்ட உடலைக் குறித்தும் இஸ்லாமிய அறிஞர்களிடம் கலந்துரையாடினார். அப்போது அங்கிருந்த அறிஞர்களில் ஒருவர் திருக்குர்ஆனைத் திறந்து கடலைக் கடந்து செல்லும் இஸ்ரவேலர்களைப் பின் தொடர்ந்து விரட்டிச் சென்ற ஃபிர்அவ்ன் மன்னன் மூழ்கடிக்கப்பட்டதையும் அவனது உடல் பின்வரும் தலைமுறைக்கு ஓர் அத்தாட்சி என்ற நிலையில் பாதுகாக்கப்படும் என்ற இறைவனின் பிரகடனத்தை வாசித்துக் காட்டினார். அவ்வசனம்
எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உன் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்"
(அல்-குர்ஆன் 10: 92)
இவ்வசனம் மோரிஸ் புகை அவர்களிடம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அங்கு கூடியிருந்தவார்களுக்கு முன்னால் அவர் அறிக்கையிட்டார்! அஷ்ஹது அன் லாஇலாஹ இல்லல்லாஹ்! வ அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்!
கெய்ரோ அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட மம்மிகளில் ஃபிர்அவ்னின் உடல் மட்டும் வித்தியாசமானதாக உள்ளது. மற்றவை ரசாயன திரவங்களைக் கொண்டும் துணிகளில் பொதிந்தும் வைக்கப்பட்டிருக்கும் போது ஃபிர்அவ்னின் உடல் மட்டும் அப்படியே பாதுகாக்கப்படுகிறது! திருக்குர்ஆனின் அறைகூவலை உண்மைப் படுத்திக் கொண்டிருக்கும் இந்த சாட்சியைக் கண்கூடாகக் கண்ட பின்னரும் மக்களில் பெரும்பாலோர் இன்னும் உறங்கிக் கொண்டுதான் உள்ளனர். திருக்குர்ஆனின் கூற்று எவ்வளவு உண்மை!
”நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்" (அல்-குர்ஆன் 10:92)
Source : http://www.irudithoodu.blogspot.com/
Subscribe to:
Comments (Atom)
